அருந்ததி சூசன்னா ராய் ஒரு ஊடகப் பச்சோந்தி
- அருந்ததி சூசன்னா ராய் ஒரு ஊடகப் பச்சோந்தி. ஊடக வெளிச்சத்துக்காக தன் கொள்கையை மாற்றிக் கொண்டே இருப்பார். நர்மதை பாதுகாப்பு இயக்கத்தில் உழைத்ததெல்லாம் மேதா பட்கர். ஊடக வெளிச்சம் படும்போது அருந்ததி ஆஜர். இந்தியா அணுகுண்டு வெடித்த போது, உலக ஊடகங்களின் மொத்த கவனம் இந்தியா மீது திரும்பியது – சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அணுகுண்டு வெடித்ததை எதிர்த்து கருத்துச் சொல்லி பிரபலமானார். நக்சல் இயக்கம் பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. இப்போது ஊடக கவனம் வரவும் அங்கேயும் அருந்ததி நுழைந்தார். காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் மீது கல்லெறிந்து உழைத்ததெல்லாம் பிரிவினை வாதிகள். ஊடக கவனம் அங்கே போகிறது என்றதும் அங்கே போய் விட்டார் அருந்ததி. நாளை வேறொரு பிரச்னை ஊடகங்களால் கவனிக்கப் பட்டால் வெட்கமின்றி அங்கே ஆஜராகி விடுவார் தான்.
- ”உலகில் மிகப்பெரிய பொய் பிரச்சாரம் என்பது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது தான். உண்மையில் இந்தியாவின் பல மாநிலங்கள் உள்நாட்டுப் போர் துவக்கும் நிலையில் உள்ளன” என்று அமெரிக்காவில் முழங்கினார் அருந்ததி. அவர் திரும்ப இந்தியா வந்திறங்கியவுடன் அவர் கைது செய்யப் பட்டு திகார் ஜெயிலுக்கு அனுப்பப் படவில்லை என்று அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு யார் போய் சொல்வது?
- அருந்ததியின் மிகப்பெரிய தவறு தேசம் என்கிற கருத்தாக்கத்தை அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். அவரைப் பொருத்தவரை தேசியம் என்பதே பாசிசம். மனித சமூகத்தில் இரு பிரிவுகள் மட்டுமே இருக்கிறது – ஒடுக்குவோர், ஒடுக்கப் பட்டோர் என்பது மட்டுமே என்பதே அவரது புரிதலாக இருக்கிறது. இப்படி ஒரு கருப்பு-வெள்ளை முடிவை வைத்துக் கொண்டே எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார். பிழை அங்கே தான் இருக்கிறது.
- உளவாளிகள் என்று கூறி அப்பாவி மக்களை படுகொலை செய்யும் மாவோயிச தீவிரவாதிகள், அப்பாவி காந்தியவாதிகள் என்றார். மும்பை தாக்குதல், இந்திய முஸ்லிம்களை ஒதுக்கி வைத்ததால் தான் என்றார். அரசாங்கம் காடுவாழ் மக்களின் நிலங்களைப் பறிக்கிறது என்றார் – உண்மையில் அருந்ததியே அப்படிப் பட்ட நிலத்தை ஆக்கிரமித்த செய்தி வெளிவந்து விட்டது. இதை எல்லாம் விட பெரிய காமெடி இருக்க முடியுமா!
- அருந்ததி எது பேசினாலும், தேசத்தை துண்டாட நினைத்தாலும் அவரை ஆதரிக்கிற இடது சாரி ஊடகங்களின் இரைச்சலில் இவரை போன்ற இன்னொரு பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தாக்கப் பட்டதும், ஜெயிலில் அடைக்கப் பட்டதும், நாடு கடத்தப் பட்டதும், சொந்த நாட்டுக்குள்ளேயே நுழைய முடியாததும் ஏன் கவனமும் ஆதரவும் பெறவில்லை?
- இந்தியா என்பதை இந்து மெஜாரிட்டி என்பது தான் அருந்ததியின் பார்வை. இந்தியாவின் பழமை, பெருமை, பன்முகத்தன்மை என்று எதுவும் அவர் கண்ணுக்கு தெரிவதே இல்லை. ஒரு பேச்சுக்கு காஷ்மீரை பிரித்து கொடுத்து விடுகிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், அதன் பிறகு அந்த மக்களுக்காக பாகிஸ்தானில் போய் தான் போராட வேண்டி இருக்கும். அதற்கு அருந்ததி துணிவாரா என்பது சந்தேகமே.
- இந்து மெஜாரிட்டி முஸ்லிம் மைனாரிட்டியை ஒடுக்குகிறது என்று குரல் கொடுக்கிற அருந்ததி, அதே காசின் மறுபாகமான முஸ்லிம் மெஜாரிட்டி இந்து காஷ்மீரி பண்டிட் மைனாரிட்டியை அழித்தொழிப்பு செய்ததைப் பற்றி வாயே திறப்பதில்லை. உண்மையில் இந்தியா முழுமையும் இருக்கிற இந்து மெஜாரிட்டிகள் அனுபவிக்காத பல சலுகைகள் காஸ்மீரி முஸ்லிம் மெஜாரிட்டிகள் அனுபவித்து வருகிறார்கள்.
- இலங்கை ராணுவத்தைக் கண்டித்து கட்டுரை எழுதிய அருந்ததி, அந்த கட்டுரையில் ஒரே ஒரு வார்த்தை கூட விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களையும், மக்களை கேடயங்களாக பயன்படுத்தியது பற்றியும் எழுதவே இல்லை. இப்படி செலக்டிவாக கண்டனம் செய்வது அருந்ததியின் வழக்கம்.
- எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லாமல், திபெத், அக்சாய் சின் போன்ற பகுதிகளை ராணுவத்தை அனுப்பி சீனா தன்னுடையதாக்கிக் கொள்ளும் போது அதை கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ளும் அருந்ததி, சட்ட பூர்வமாக இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவுடன் இணைந்த காஷ்மீரை, இந்தியாவின் பகுதி அல்ல என்று கூறுவது வேடிக்கை தான்.
- ராணுவத்தை காஷ்மீரை விட்டு வெளியேற்ற போராடும் அதே வேளையில், ராணுவம் அங்கே குவிக்கப் படும் காரணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் அல்லவா. அந்த பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல், கல்லெறியும் பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவை குறைந்தாலே பெரும் பொருட் செலவில் ராணுவம் குவிக்கப்படுவது நிறுத்தப் படும். அதற்கு பாடுபடலாமே.
- அருந்ததி ஏழையாக பிறந்தவரில்லை. ஏழைகளுடன் வாழ்ந்தவரும் இல்லை. ஒடுக்கப் பட்ட இனத்தை சேர்ந்தவரும் அல்ல. நன்கு படித்த, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். உலகம் முழுவதும் பயணம் செய்தவர். இருக்கட்டுமே ஒடுக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா? செய்யலாம் தான் ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். நர்மதா பாதுகாப்பு இயக்கத்தில் மேதா பட்கருடன் நெருங்கி தொடர்பு கொண்டவர் இப்போது அந்த பிரச்னையைப் பற்றி பேசுவதே இல்லை. அந்த போராட்டத்தில் மூன்று மாதம் சிறை அல்லது 75 ரூ அபராதம் விதிக்கப் பட்டபோது, சிறைக்கம்பிகளுக்கு பின்னால் போட்டோ எடுக்க தேவையான நேரமே இருந்தார். பிறகு மரியாதையாக பணத்தைக் கட்டி வெளியே வந்து விட்டார். மக்களுக்காக குரல் கொடுத்தவர், அந்த மக்களுடனே சிறையில் இருப்பது தானே சரி… இந்திய சுதந்திரத்துக்காக போராடிய எந்த தியாகியாவது, காந்தி உட்பட அபராதம் கட்டி வெளியே வர சம்மதிப்பார்களா… மேல் தட்டு அருந்ததிக்கு சிறை ஒரு போட்டோ வாய்ப்பு அவ்வளவே.
- அருந்ததியின் புகழ் பெற்ற நாவலான God of Small things உண்மையில் ஹார்பர் லீ எழுதிய To kill a mocking bird நாவலில் இருந்து பல வகைகளில் உருவப்பட்டது என்று சொல்பவர்கள் உண்டு. ஏனோ அந்த ஒரு நாவலை எழுதிய பின் அருந்ததியின் கற்பனை வளம் வறண்டு போனது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
- அருந்ததி ஆதரிக்கும் ஏழ்மையான, ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சியான மாவோயிஸ்டுகளின் கையில் இருப்பதோ, ஏகே 47, மேம்படுத்தப் பட்ட வெடிகுண்டுகள் (IED)… இதையெல்லாம் அவர்கள் பட்டினியில் தவித்துக் கொண்டே வாங்கினார்கள் என்று சொல்கிறார் அருந்ததி. அல்லது இப்படிப் பட்ட ஆயுதங்களுடன் போராடும் கூட்டம் தான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நல்லது செய்யப் போகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசாங்கங்கள் அல்ல என்று சொல்கிறார்.


leave a comment